வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான லொறி : போக்குவரத்து தடை !!

598

ஹட்டன் போடைஸ் டயகம ஊடான பிரதான வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அப்பாதையூடான பொது போக்குவரத்து 12 மணித்தியாலங்களுக்கு மேல் தடைப்பட்டுள்ளது.

ஹட்டன் போடைஸ் டயகம ஊடான பிரதான வீதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் அல்பியன் பகுதியில் லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

டயகம கிழக்கு தோட்டத்திலிருந்து 8 தொன் தேயிலையை ஏற்றிக்கொண்டு கொழும்பு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தினால் டயகம பகுதியிலிருந்து ஹட்டனுக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் ஹட்டனிலிருந்து டயகம பிரதேசத்திற்குச் செல்லும் வாகனங்கள் என்பவற்றின் போக்குவரத்து சேவை தடைப்பட்டுள்ளன.

இதன் காரணமாகத் தொழிலுக்குச் செல்பவர்கள், பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் உள்ளிட்ட அனைவரும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை இன்னும் குறித்த லொறியை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்கையில் தொடர்ந்து இப்பிரதேசத்தில் மழை பெய்து வருவதால் இப்பாதையூடான போக்குவரத்திற்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.