
இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது, தமிழ்நாட்டில் விஜயகாந்த் அலை வீசுகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் நாகர்கோவிலில் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கான கூட்டணி, அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக உருவான கூட்டணி. யார் தயவும் இல்லாமல் நிச்சயமாக 300 இடங்களுக்குமேல் பிடித்து இந்த கூட்டணி தனித்து ஆட்சி அமைக்கும்.
குஜராத்தை விட தமிழகம் முதன்மையான மாநிலம் என ஜெயலலிதா சொல்கிறார். இதற்கு ஒரு உதாரணத்தை அவரால் சொல்ல முடியுமா?
குஜராத்தில் மின்வெட்டு என்பதே கிடையாது, நர்மதா ஆற்றில் இருந்து பல கிலோ மீற்றருக்கு பைப்புகள் அமைத்து குடிநீர், தொழிற்சாலை, விவசாயம் என அனைத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது.
குஜராத்தில் லஞ்ச, ஊழலற்ற ஆட்சி நடக்கிறது மேலும் தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்றவர் விஜயகாந்த் மட்டுமே. மோடி மூலம் இந்தியா வல்லரசு ஆகும், விஜயகாந்த் மூலம் தமிழ்நாடு நல்லரசு ஆகும். எனவே பா.ஜ. கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பேசியுள்ளார்.




