வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களுக்கே முதல் கட்டமாக எரிபொருள் அட்டை விநியோகம்!!

1175

வவுனியா மாவட்டத்தில் பெற்றோல் விநியோகத்தில் முதல் கட்டமாக அரச உத்தியோகத்தர்களுக்கே எரிபொருள் அட்டை விநியோகிக்கப்படவுள்ளதுடன், ஒன்லைன் பதிவுகள் முழுமையாக இடம்பெறும் என மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விநியோக நடைமுறை குறித்து நேற்று (23.06) கேட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதற்கான வழிவகைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் எரிபொருள் அட்டைகள் வழங்கப்பட்டு அதன் ஊடாக பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் பெறும் அனைத்து வாகனங்களும் ஒன்லைனில் பதிவு செய்யப்படுவதுடன் பெற்றோல் கிடைப்பனவு மற்றும் தேவைப்பாடு என்பவற்றுக்கு ஏற்ப எரிபொருள் விநியோக அளவுகளில் மட்டுப்பாடுகள் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முச்சக்கர வண்டி சாரதிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அவர்களது முச்சக்கர வண்டிகளுக்கு பெற்றோல் வழங்குவதற்கான புதிய நடைமுறை ஒன்று அமல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் சிறுபோக அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், டீசல் விநியோகம் தொடர்பில் அவசர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இரசேந்திரங்குளத்தின் கீழான பகுதிகளில் அறுவடை ஆரம்பித்துள்ளதால் அவர்களது அறுவடைக்கு தேவையான 3000 லீற்றர் டீசல் விநியோகம் நாளை (24.06) முதல் இடம்பெறும்.

வவுனியாவில் சிறுபோகத்தில் 12 ஆயிரத்து 238 ஏக்கர் நெல் செய்கை செய்யப்பட்டுள்ளது. வருகின்ற யூலை முதல் கிழமையில் இருந்து ஓகஸ்ட் கடைசிக் கிழமை வரை இந்த அறுவடை இடம்பெறும் என எதிர்பார்கின்றோம்.

இதற்காக கிட்டத்தட்ட 3 இலட்சத்திற்கு மேலதிகமான டீசல் எரிபொருள் தேவைப்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிப்பர் முதலான கனரக வாகனங்களுக்கான டீசல் விநியோகத்தில் மட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தொழில் ரீதியான செயற்பாட்டை முன்னெடுக்கும் கனரக வாகனங்களுக்கு டீசல் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கவுள்ளதுடன், ஏனைய மாவட்ட டிப்பர் போன்ற கனரக வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்படவுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம் சீராக இடம்பெறுவது குறித்து தொடர்ந்தும் பரிசீலித்து வருவதுடன், எரிபொருள் தேவை குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் மாவட்ட செயலக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.