வவுனியாவில் காணாமல் போன குடும்பஸ்தர் 5 நாட்களின் பின் சடலமாக மீட்பு!!

3367

காணாமல் போன குடும்பஸ்தர்..

வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29.06.2022) மாலை 3.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து வரும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மூக்கன் சஜீவன் என்பவர் கடந்த சனிக்கிழமை (25.06.2022) காலை வீட்டிலிருந்து சென்றிருந்த நிலையில் மாலையாகியும் வீடு திரும்பவில்லை அதனையடுத்து அவரை தேடும் பணியில் உறவினர்களுடன் இணைந்து பொதுமக்களும் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அவர் கிடைக்காமையினால் நேற்றுமுன்தினம் (27.06.2022) மாலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்று (29.06) மாலை குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் பொதுமகன் ஒருவர் கழிவகற்றல் நடவடிக்கைக்காக சென்ற சமயத்தில் அப்பகுதியில் சடலமொன்றினை அவதானித்துள்ளார்.

அதனையடுத்து இவ்விடயம் பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் சடலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மூக்கன் சஜீவன் என தெரியவந்துள்ளது.

தடவியல் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மேலதிக விடயங்களை தெரிவிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.