இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை : கணவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

526

நுங்கம்பாக்கத்தில்..

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை நொளம்பூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அருந்ததி(25). கடந்த 2019ஆம் ஆண்டு அருந்ததி, சாதிக் இப்ராஹிம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குழந்தை பெற்றபின்பு கணவர் சாதிக் இப்ராஹிம் வேலை செய்ய கூறி தன்னை கொடுமைபடுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் கூறி கடந்த மாதம் 22ஆம் தேதி அருந்ததி பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து சமாதானம் ஆகி மீண்டும் அருந்ததி தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து அருந்ததி தற்கொலை செய்து கொண்டார்.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தனது மகள் அருந்ததி தற்கொலை செய்து கொண்டதாகவும், அருந்ததியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அருந்ததியின் தந்தை முருகன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியிருப்பதால் ஆர்.டி.ஓ பிரவீனா குமாரி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக அருந்ததியின் கணவரான நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சாதிக் இப்ராஹிமை (25) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாதிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.