நிறைவு பெறுகிறது விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி!!

722

Flight

கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் திகதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடி வருகின்றன.

இதைப்போல மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடி மீட்கும் பணியிலும் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து பிங் எனப்படும் சமிக்ஞைகள் கடந்த 8ம் திகதி கிடைத்ததால், கறுப்பு பெட்டியை விரைவாக மீட்கும் நோக்கில் அமெரிக்காவின் புளூபின்-21 என்ற நீர்மூழ்கி ரோபோ ஈடுபடுத்தப்பட்டது.

இந்த ரோபோ 7 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்த பிறகும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீட்புக்குழுவினர் விரக்தியடைந்துள்ளனர்.

எனவே கறுப்பு பெட்டியை தேடும் பணியை 5 அல்லது 6 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். முன்னதாக இந்த பணியை பல்வேறு மாதங்களுக்கு நீட்டிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.