கொல்கத்தாவில்..

கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலனை பெற்றோரின் சம்மதப்படி திருமணம் செய்திருக்கிறார்.

கொல்கத்தாவை சேர்ந்தவர் அபிஷேக் ரே. பேஷன் டிசைனராக இருக்கும் இவர் குர்கோனை சேர்ந்த சைத்தன்யா என்பருடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். இந்த நட்பு விரைவிலேயே காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து இருவரும் தங்களது வீட்டில் இதுகுறித்து பேசி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு பலரும் சமூக வலை தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தன்னுடைய காதலை வீட்டில் வெளிப்படுத்தும்போது பல்வேறு சிக்கல்களை சந்தித்ததாக கூறுகிறார் சைதன்யா. இதுகுறித்து அவர் பேசுகையில்,”கடந்த 2016 ஆம் ஆண்டு என்னுடைய பாலின விருப்பம் குறித்து எனது குடும்பத்தாரிடம் தெரிவித்தேன்.

இந்த பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. ஆனால், விரைவிலேயே அவர்கள் என்னுடைய விருப்பத்தை உணர்ந்துகொண்டனர். எங்களுடைய திருமணம் இதுபோல் உள்ள பிறருக்கும் வழிகாட்டியாக அமையும் என நான் நம்புகிறேன்” என்றார்.

ஆரம்பத்தில் தடைகள் இருந்தபோதிலும் தங்களுடைய காதல் அனைத்தையும் தகர்த்ததாக கூறுகிறார் அபிஷேக். இதுபற்றி அவர் பேசுகையில்,”இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 377 வது பிரிவின்படி, ஒருபால் தம்பதியினர் ஒன்றாக வாழ்வது குற்றம் அல்ல. இருப்பினும் ஒருபால் தம்பதியர் திருமணம் செய்துகொள்வது சிரமமான காரியமாக இருந்துவருகிறது.

இந்நிலையில், எங்களது காதல் இனம், மொழி, பாலினம் ஆகியவற்றை வென்று காட்டியிருக்கிறது. எனக்கு தெரிந்து கொல்கத்தாவில் நடைபெறும் முதல் ஒருபால் திருமணம் இதுவாகத்தான் இருக்கும்.

திருமணம் என்பது இருவர் ஒன்றிணைவது மட்டுமல்ல. மாறாக இரண்டு குடும்பங்கள் ஒன்றிணைவது. எதிர்காலத்தில் ஒருபால் காதலர்கள் திருமணம் செய்ய முன்வருவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

தங்களது திருமணத்துக்கு உறவினர்கள் அளித்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் இந்த தம்பதி தேன் நிலவுக்கு பாரிசுக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதன்பின்னர், குர்கோனை சேர்ந்த சைதன்யா கொல்கத்தாவுக்கு சென்று அபிஷேக்குடன் வசிக்க இருப்பதாக கூறியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சமூக வலை தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.





