மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பெங்களூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், நான்கு மணிநேர போராட்டத்தின் பின்னர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரகத்தை சேர்ந்த எம்.எச்.192 என்ற மலேசிய பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் மலேசிய நேரப்படி நேற்றிரவு 10.09 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இந்தியாவின் பெங்களூருக்கு 166 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தையே சுற்றி சுற்றி வந்தது.
இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஏனைய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
இது குறித்த தகவலை டிவிட்டர் இணையதளத்தில் பகிர்ந்துள்ள மலேசிய போக்குவரத்து துறை மந்திரி ஹிசாமூதின் ஹுசைன் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக போயிங்க் 737- 800 விமானம் 159 பயணிகள் மற்றும் 7 பாதுகாப்பு படையினர் சென்றுள்ளனர். வலது பக்க லேண்டிங் கியரில் ஏற்பட்ட பழுது காரணமாக கட்டாயமாக தரையிறக்கப்பட்டது என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.