சென்னையில்..
திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்த நிலையில் பெண் தூக்கில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, அமைந்தகரை, பி.பி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கலைவேந்தன் , சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. பிரியதர்ஷினி மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் வக்கீலுக்கு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்தார். அந்த தகவலின் பெயரில் போலீசார் இறந்து போன பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
திருமணமான சில மாதங்களில் இருந்தே கணவன் – மனைவிக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பிரியதர்ஷியின் பெற்றோர், மாதர் சங்கத்தினருடன் இணைந்து அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர். டி. ஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.