புதுச்சேரியில்..
புதுச்சேரியில் ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் விதியைச் சேர்ந்தவர் நாகராஜின் மகள் கீர்த்தனா. கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இதனிடையே கல்லூரி மாணவி கீர்த்தனாவை அவரது உறவினரான அதே பகுதியை சார்ந்த முகேஷ் என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் காதலுக்கு மாணவி கீர்த்தனா மறுப்பு தெரிவித்ததால் அடிக்கடி கீர்த்தனாவிடம் தகராறு செய்த வந்ததாகவும் தன்னை தவிர்த்து வேறு யாரிடமும் பேசிக்கூடாது என மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை கல்லூரி முடித்த பின்னர் தனியார் பேருந்தில் இருந்து சன்னியாசிக்குப்பம் கடைவீதியில் இறங்கி வீட்டிற்கு செல்ல முற்பட்டபோது கத்தியுடன் மறைந்திருந்த முகேஷ் கீர்த்தனாவின் கழுத்து மற்றும் கை கால் பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீர்த்தனா சரிந்து கீழே விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த கீர்த்தனாவை மீட்டு மதகடிப்பட்டு உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று பரிசோதித்ததில் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருபுவனை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய முகேஷை வலை வீசி தேடி வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பியோடி முகேஷ் மீது மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.