கன்வார் யாத்திரை..

பெற்றோர்களை அவர்களது வயதான காலத்தில் பேணிப்பாதுகாப்பது என்பது ஒவ்வொரு மகன் மற்றும் மகள்களுடைய முக்கியமான கடமையாகும். நமக்கான உலகத்தை அமைத்துத்தர ஒவ்வொரு நாளும் போராடிய அவர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள்.

இருப்பினும் சிலர் வயதான தங்களது தாய், தந்தையரை நிராதரவாக விட்டுவிட்டு செல்வது குறித்தும் நாம் தினந்தோறும் கேள்விப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். இதனிடையே, தன்னுடைய தாய் மற்றும் தந்தையை தோளில் சுமந்தபடி பாதயாத்திரை செல்லும் மகன் ஒருவரின் வீடியோ வெளியாகி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

வருடாந்திர கன்வார் யாத்திரை ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 26 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நேரத்தில், ஹரித்வார், கௌமுக் மற்றும் உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி மற்றும் பீகாரில் உள்ள சுல்தங்கஞ்ச் ஆகிய இந்து புனிதத் தலங்களுக்குச் சென்று லட்சக்கணக்கான சிவ பக்தர்கள் கங்கை நதியில் நீராடுகிறார்கள். இது ஒவ்வொரு வருடமும் விமர்சையாக நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்கள். அதில், ஒரு பக்தர் தனது அப்பா, அம்மாவை தோளில் சுமந்தபடி வெறுங்காலுடன் யாத்திரையை மேற்கொள்கிறார். தாராசு போல இருக்கும் இருக்கையில் வலப்பக்கம் தனது தாயையும் இடப்பக்கத்தில் தந்தையையும் அமர வைத்து அவர் நடந்து சென்றது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

இந்நிலையில், இந்த வீடியோவை உத்திரகாண்ட் மாநிலத்தின் DGP ஆன அசோக் குமார் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில்,”இப்போதெல்லாம், வயதான பெற்றோர்கள் வெறுக்கப்படுகிறார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது தங்கள் குழந்தைகளுடன் வாழ அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இதே சமூகத்தில், பல்லக்கில் தன் வயதான பெற்றோருடன் கன்வர் யாத்திரை வந்த லட்சக்கணக்கான சிவ பக்தர்களில் ஒருவரான ஷ்ரவன் குமாரும் இருக்கிறார். அவருக்கு என் வணக்கங்கள்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை இதுவரையில் 11,000 பேர் பார்த்துள்ளனர். மேலும், தனது தாய் மற்றும் தந்தையை தோளில் சுமந்து செல்லும் அந்த நபரையும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.





