அக்காவுடன் ஏற்பட்ட சேலை தகராறு : புகையிரதம் முன் பாய்ந்த இளம்பெண்!!

2043

செங்கல்பட்டில்..

அக்காவின் புடவையை தங்கை உடுத்தியதன் காரணமாக அக்கா திட்டியதால் மனமுடைந்த தங்கை இரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலை அடுத்துள்ள திருக்கச்சூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளியான இவருக்கு பவித்ரா, நிரோஷா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் நிரோஷா (20) பி.எஸ்சி நர்சிங் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவர் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு தினமும் மின்சார இரயிலில் செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலை சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையத்திற்கு சென்ற மாணவி, அங்கு வந்த செங்கல்பட்டிலிருந்து – சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இதனை கண்ட இரயில் பயணிகள், உடனடியாக இரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் குறித்த தகவல்களையும் சேகரித்தனர். அதன்படி அந்த பெண்ணின் தந்தைக்குக் தகவல் கொடுத்தனர்.

பின்னர் நடைபெற்ற விசாரணையில், மாணவி நேற்று கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு விழாவிற்கு தனது அக்காவின் புடவையை அணிந்து சென்றுள்ளார். இதனால் அக்கா பவித்ரா, அவரை சரமாரியாக திட்டி சண்டையிட்டுள்ளார். இதனால் தங்கை நிரோஷா மிகவும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதையடுத்து மறுநாள், நிரோஷாவை அவரது தந்தை சமாதானப்படுத்தி வழக்கம்போல், சிங்கப்பெருமாள் இரயில் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். மேலும் ஆறுதலாக வார்த்தைகளை கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். தந்தை சென்றதையடுத்து, நிரோஷா குழப்பத்தில் இரயில்வே தண்டவாளம் அருகே நின்றுள்ளார்.

அப்போது வந்த மின்சார விரைவு இரயிலின் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே நிரோஷா உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதற்கு இது தான் காரணமா அல்லது வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.