தூத்துக்குடியில்..
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியின் மகள் ரேஸ்மா (19). இவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
அதேஊரைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜ் (28). வெளிநாட்டில் வேலை பார்த்த மாணிக்கராஜ் ஊருக்கு திரும்பி கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
முத்துக்குட்டி, மாணிக்கராஜ்-க்கு மாமா முறை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணிக்கராஜ்-க்கும், ரேஸ்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. மாணிக்கராஜ் உறவுக்காரர் என்றாலும் மது பழக்கத்தால் வேலைக்கு சரிவர செல்லாமல் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
மாணிக்கராஜ்,ரேஷ்மாவிற்கு இடையே வயது வித்தியாசம் இருந்துள்ளது. மேலும் மாணிக்கராஜ் படிக்கவில்லை என்பதால் ரேஷ்மா தந்தை முத்துக்குட்டி இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மகள் பிடிவாதமாக இருந்ததால் முத்துக்குட்டி வேறொரு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்கவும் முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த மாதம் 28ஆம் தேதி ரேஷ்மா வீட்டை விட்டு வெளியேறினார். மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா இருவரும் மதுரை திருமங்கலத்திற்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையில் தனது மகளை காணவில்லை என்று கூறி எட்டயபுரம் காவல் நிலையத்தில் முத்துக்குட்டி புகார் அளித்துள்ளார். போலீசார் தங்களை தேடுவதை தெரிந்து கொண்ட தம்பதியினர், திருமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி தாங்கள் திருணம் செய்து கொண்டதை தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் எட்டயபுரம் காவல் நிலையம் போலீசார் மூலம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க நினைத்திருந்த நிலையில் இப்படி திருமணம் செய்து விட்டதாக ரேஷ்மாவின் பெற்றோர் வேதனைபட்டு கூறியது மட்டுமின்றி, எந்த காலத்திலும் தனது மகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியதாக தெரிகிறது.
ரேஷ்மாவின் பெற்றோரின் கோபம் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தெரிய வர போலீசார் மாணிக்கராஜ் – ரேஷ்மா தம்பதியை தொடர்பு கொண்டு தற்பொழுது ஊருக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் மாணிக்கராஜ்விற்கு அங்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஊருக்கு திரும்புவோம், நான் என்னுடைய பெற்றோர்களிடம் பேசி சமதானம் செய்து விடுவேன் என்று ரேஷ்மா தெரிவித்துள்ளார்.
இதையெடுத்து தான் அந்த தம்பதில் ஊருக்கு திரும்பியுள்ளனர். சில உறவினர்கள் மூலமாக ரேஷ்மா தனது பெற்றோருடன் பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் விவசாயம் மற்றும் 100 நாள் வேலைக்கு சென்று விட மாணிக்கராஜ் – ரேஷ்மா இருவரும் தனியாக இருந்த போது, ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி அவர்களை இருவரையும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியதாகவும், அதற்கு முன்பாகவே அவரது மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தம்பதியின் உடல்களை மீட்டு, உடற்கூறாய்வுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் தம்பதியை கொலை செய்த வழக்கில் ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி, தாய் மகாலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.