ஆர்ப்பாட்டம்..
வவுனியா மாவட்ட சுகாதார பணியாளர்களுக்கென விசேட தினத்தில் தனியொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சுகாதார பணியாளர்களினால் இன்று (27.07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் வைத்தியசாலை பணியாளர்களிற்காக விசேட தினத்தில் தனியொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த செயற்பாடானது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டதுடன், பொதுமக்களின் வரிசையின் ஊடாகவே எரிபொருளினை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. இதனால் தமது கடமைக்கு உரிய நேரத்திற்கு செல்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் இந்நிலை மாற்றப்பட்டு தமக்கென தனியான ஒரு தினத்தில் எரிபொருள் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுவதுடன் இந்நிலை தொடருமாயின் தொடர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.