சொந்த வீட்டை விற்று சூதாட்டம் : 18 லட்சத்தை இழந்ததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

1749

தமிழகத்தில்..

தமிழகத்தில் இளைஞர் ஒருவர் ஒன்லைன் விளையாட்டில் 18 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததால் தற்கொலை முடிவை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிரபு ஒன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகளவில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த விளையாட்டிற்கு அடிமையான அவர் 15 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார். அதேபோல் கேரளா லொட்டரியிலும் மூன்று லட்சத்திற்கும் மேல் பிரபு பணத்தை இழந்ததால் மிகுந்த விரக்தியில் இருந்துள்ளார்.

தனது சொந்த வீட்டை விற்க முயற்சித்த பிரபு, அதில் கிடைத்த முன்பணத்தை வைத்து இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழக்கும் பலர் இதுபோன்ற விபரீத முடிவை எடுப்பது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.