திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1509

விழுப்புரத்தில்..

விழுப்புரம் அருகே திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தை சார்ந்த நல்லேந்தரன் என்பவரது மகள் வினோதினி.

இந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர வேண்டுமென பெற்றோர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர்கள் திருமணம் செய்து கொண்டு கல்லூரி படிப்பினை தொடர வேண்டும் என்று கூறி திருமணம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து மாணவி வினோதினி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் அவரது பெற்றோர்களுடன் மீண்டும் சண்டையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மகளை காணவில்லை என்பதால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் சந்தேகத்தின் அடிப்படையில் மாணவியின் பெற்றோருக்கு சொந்தமான கிணற்றில் உள்ள நீரை இறைத்து தேடியுள்ளனர். அப்போது மாணவியை கிணற்றிலிருந்து சடலமாக உடலை மீட்டுள்ளனர்.

மாணவி இறப்பு குறித்த தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரியில் சேருவதற்காக திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.