குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தந்தை!!

1335

திருவாரூரில்..

திருவாரூரில் குழந்தையோடு சேர்ந்து விஷமருந்திய நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அழகிய குடும்பம்: திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் கோபால்-வீரம்மாள் தம்பதி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அதேப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கூலித் தொழிலாளியான கோபால் தினமும் மது போதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் வழக்கம் போல குடித்துவிட்டு வீடு திரும்பிய கோபால், மனைவி வீரம்மாளை அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனைக்கண்ட அப்பகுதியினர் வீரம்மாளை மீட்டுள்ளனர்.

பின்னர் வீரம்மாள் இதுகுறித்து முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து விசாரித்த மகளிர் போலீசார் இருவரையும் சமரசம் செய்து வைத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனாலும் திருந்தாத கோபால் நேற்றிரவு மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து “காவல் நிலையத்தில் நீ ஏன் புகார் செய்தாய்” என்று கூறி மனைவியை அடித்துள்ளார்.

அடி தாங்க முடியாத வீரம்மாள் வீட்டிலிருந்து வெளியேறி இரவு பள்ளிக்கூடத்தில் தங்கியுள்ளார். காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, கணவர் கோபால் விஷமருந்தி இருந்ததையும், குழந்தைக்கும் விஷம் கொடுத்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 6-வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.