தொடரும் தற்கொலைகள் : கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

1372

தமிழகத்தில்..

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வரும் சூழலில், திருவேற்காடு பகுதியில் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

திருவேற்காடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, மேல் தளத்தில் விடுதியும், கீழ் தளத்தில கல்லூரியும் இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர், இங்கே ஈரோட்டை சேர்ந்த 19 வயதான சுமதி என்ற மாணவி இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார்.

நேற்று காலை வகுப்பிற்கு சென்றுவிட்டு, மதியம் தோழிகளுடன் சேர்ந்து சாப்பிட சென்றுள்ளார், அனைவரும் வகுப்புக்கு கிளம்பிய பின்னர், சிறிது நேரம் கழித்து வருவதாக கூறியுள்ளார். நீண்டநேரம் ஆகியும் சுமதி வராததால், தோழிகள் சென்று பார்த்துள்ளனர், அப்போது அறையின் உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது, உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலிசாருக்கு தெரிவிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் சுமதியின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே சுமதியின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் ஈடுபட முயன்றனர், இதையறிந்த போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? சக மாணவிகளுடன் தகராறு ஏற்பட்டதா? அல்லது கல்லூரி நிர்வாகத்தில் ஏதாவது தகராறு ஏற்பட்டதா? என பல்வேறு கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.