ஐடி வேலையை விட்டுவிட்டு கழுதை வளர்த்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞன்!!

1292

கர்நாடக மாநிலத்தில்..

கர்நாடக மாநிலத்தில் ஐடி வேலையை விட்டுவிட்டு கழுதை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நபர் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டிவருகிறார். இது பலரையும் வியப்படைய செய்திருக்கிறது. கல்வியை முடித்தபிறகு சமூகம் தரும் அழுத்தங்களால் வேலைகளுக்கு செல்பவர்களுக்கு மத்தியில், காத்திருந்து தங்களுடைய கனவுகளுக்காக போராடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதுவும், தற்போது பார்க்கும் வேலையை விட்டுவிட்டு தொழில் துவங்க செல்லும் நபர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், துவங்க இருக்கும் தொழிலில் உள்ள ஏற்ற இறக்கங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் இப்படியான முயற்சிகளை மேற்கொள்வது ஆபத்தானது என தொடர்ந்து நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால், கர்நாடகாவை சேர்ந்த ஒருவர், படிப்படியாக கழுதை வளர்ப்பு குறித்து அறிந்த பின்னர் தைரியமாக தனது ஐடி வேலையை விட்டுவிட்டு தொழில் துவங்கியுள்ளார். கர்நாடகாவின் தட்சிண கன்னடா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் கவுடா. BA பட்டதாரியான கவுடா, 2020 ஆம் ஆண்டில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியிலிருந்து விலகிய பிறகு ஐரா கிராமத்தில் 2.3 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த விவசாயம், கால்நடை பராமரிப்பு, கால்நடை சேவைகள், பயிற்சி மற்றும் தீவன மேம்பாட்டு மையமான ஐசிரி பண்ணையை தொடங்கினார்.

ஏற்கனவே முயல்கள் மற்றும் கடக்நாத் கோழிகளை வளர்க்கும் அந்த பண்ணையில் கழுதைகளையும் வளர்க்க திட்டமிட்டிருக்கிறார் கவுடா. அதன்படி 20 கழுதைகளை அவர் வாங்கி வளர்க்க துவங்கியுள்ளார். இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் கழுதை பால் வியாபாரம் செய்ய நினைத்த இவருக்கு நல்ல நல்ல லாபமும் கிடைத்திருக்கிறது.

சந்தையில் 30 மிலி கழுதை பால் 150 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனை கவனித்த கவுடா, தன்னுடைய கழுதை பால் வியாபாரத்தை பெரிதுபடுத்தியுள்ளார். தற்போது 17 லட்ச ரூபாய்க்கும் அதிகமான ஆர்டர்கள் தனக்கு கிடைத்துள்ளதாக பெருமையுடன் கூறுகிறார் கவுடா.

இதுபற்றி பேசிய அவர்,”கழுதை பால் ஆரோக்கியம் நிறைந்தது. மருத்துவ குணம் உள்ளது. தொடக்கத்தில், கழுதை வளர்ப்பு தொழிலுக்கு ஆதரவு கிடைக்காமல் இருந்தது. ஆனால், இப்போது நல்ல நிலையில் இருக்கிறது. இதுபோல பண்ணை துவங்க சிலர் ஆலோசனை கேட்டு வருகிறார்கள்.

அவர்களுக்கும் நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்” என்றார். கழுதை வளர்ப்பு குறித்து பலநாட்கள் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே, கவுடா இந்த தொழிலில் இறங்கியுள்ளார். அதனாலேயே அவருக்கு வெற்றி வசப்பட்டிருக்கிறது.