சொந்த அண்ணனை அடித்தே கொன்ற தம்பி சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!

594


கேரள மாநிலத்தில்..



கேரள மாநிலத்தில் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்ட அண்ணனை, சொந்த தம்பியே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே உள்ள முளையன் காவு பகுதியைச் சேர்ந்தவர் சர்வர் பாபு(24).



இவர் தனது தம்பி சக்கீர் (18) இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது, செல்போனில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் சக்கீரின் தூக்கம் பாதிக்கவே, அண்ணனிடம் சத்தத்தை குறைத்து வைக்குமாறு கூறியுள்ளார். ஆனாலும், பாபு தொடர்ந்து சத்தமாக பாட்டு கேட்டுள்ளார். இது சாக்கீருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.




எழுந்து வந்த அவர், மரக்கட்டை ஒன்றை எடுத்து சொந்த அண்ணன் என்றும் பாராமல் தலையில் பலமுறை ஓங்கி அடித்துள்ளார். படுகாயமடைந்த பாபு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து மயக்கமானார். உடனே அதிர்ச்சியடைந்த தம்பி சக்கீர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சர்வர் பாபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், தப்பியோடிய சக்கீரை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து கேட்டறிந்த பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.