நாமக்கல்லில்..
தமிழக மாவட்டம் நாமக்கல்லில் ஒன்லைன் ரம்மி விளையாட்டில், 5 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். ஒன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர், வெளிநாடு செல்ல வைத்திருந்த பணத்தை வைத்து விளையாடியுள்ளார்.
அதில் பணத்தை இழந்த சுரேஷ், இழந்ததை மீட்க வேண்டும் என்று எண்ணி நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளார். அதனை வைத்து தொடர்ந்து விளையாடிய அவர் மேலும் நஷ்டமடைந்ததால் விரக்தி அடைந்துள்ளார். 5 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த சுரேஷ் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
கடிதம் ஒன்றை எழுதிய சுரேஷ் அதில், வெளிநாடு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் உறவினர்களிடம், நண்பர்களிடம் பணம் வாங்கி முழுமையாக ரம்மியில் இழந்து விட்டேன்.
மேலும், ஒன்லைன் ரம்மியில் இருந்து மீள முடியவில்லை, Bye Bye Miss U ரம்மி என குறிப்பிட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழப்பதால் பலர் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.