தாய் இறந்தது தெரியாமல் தாயின் மீது படுத்திருந்த பச்சிளம் குழந்தை : இரயில் நிலையத்தில் சோகம்!!

1797

இரயில் நிலையத்தில்..

இரயில் நிலையத்தில் தாய் இறந்தது கூட தெரியாமல், 3 வயது குழந்தை பசியால் அழுதுகொண்டிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியிலுள்ள இரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் படுத்துகிடந்துள்ளார்.

அப்போது அவரது 3 வயது குழந்தை அழுதபடியே அங்கும் இங்கு திரிந்துள்ளார். இதனை நீண்ட நேரமாக கண்காணித்த சில அதிகாரிகள் அந்த பெண்ணை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அந்த பெண் எழுந்திருக்கவில்லை.

பிறகு தண்ணீர் தெளித்தும் எழுப்பி பார்த்தபோது எழுந்திருக்காததால், மருத்துவர்கள் வந்து சோதனை செய்தனர். அப்போது அவர் உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை மீட்ட அதிகாரிகள், பிணவறையில் சுமார் 72 மணி நேரம் வைத்திருந்தனர்.

அந்த பெண்ணை தேடி யாரேனும் வருவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை தேடி யாரும் வரவில்லை என்பதால் அவரது உடலை அதிகாரிகள் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, இறுதிச்சடங்கு நடத்தி முடித்தனர். இதனிடையே அழுது கொண்டிருந்த அந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “அந்த பெண்ணை பரிசோதனை செய்ததில், அவர் இருந்திருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த சிறுவனை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தோம். அந்த பெண்ணை தேடி யாரேனும் வருவார் என்று அவரது உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருந்தோம்.

ஆனால் யாரும் வரவில்லை என்பதால் நாங்களே இறுதிச்சடங்கை செய்து முடித்து விட்டோம். தற்போது இந்த பெண் மற்றும் காப்பகத்தில் இருக்கும் சிறுவன் குறித்து விசாரணை செய்து வருகிறோம். மேலும், அவர்களது புகைப்படங்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.

அதோடு அந்த பெண்ணும், அவரது குழந்தையும் பாகல்பூர் இரயில் நிலையத்திற்கு எந்த இரயிலில் வந்து இறங்கினர் என்பதை அறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர். தாய் இறந்தது கூட தெரியாமல், 3 வயது குழந்தை பசியால் அழுதுகொண்டிருந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.