விமானத்தில் அறிமுகமான ஆணிடம் மகனை கொடுத்து விட்டு தப்பிச் சென்ற பெண்!!

800

விமானத்தில்..

சவுதியில் இருந்து வந்த விமானத்தில் அறிமுகமான பெண்ணொருவர் தனது இரண்டு வயதான மகனை பார்த்துக்கொள்ளுமாறு கூறி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று களுத்துறையில் நடந்துள்ளது.

இது தொடர்பாக களுத்துறை தெற்கு போதியவத்தை பிரதேசத்தை சேர்ந்த எஸ்.சாந்த அப்புஹாமி என்பவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 11 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் தொழில் புரிந்து விட்டு, விமானத்தில் நாடு திரும்பிக்கொண்டிருந்த போது. 2 வயது ஆண் குழந்தையுடன் வந்த பெண்ணொருவர் விமானத்தில் அறிமுகமாகியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து களுத்துறை செல்ல வேண்டும் எனக் கூறியதால், தான் குழந்தை மற்றும் பெண்ணை வாடகை வாகனத்தில் களுத்துறைக்கு அழைத்து வந்ததாக முறைப்பாடு செய்துள்ள நபர் கூறியுள்ளார்.

களுத்துறை நகருக்கு வந்த போது, குளிர்பானம் ஒன்றை வாங்கி வருவதாக கூறி, குழந்தையை தன்னிடம் கொடுத்து விட்டு, வாகனத்தில் இருந்து இறங்கி சென்ற பெண் மீண்டும் திரும்பி வரவில்லை என முறைப்பாடு செய்த நபர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணிகத்தின் பொலிஸ் பரிசோகர் நுவந்தி தலைமையிலான அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.