உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த இலங்கைத் தமிழர் : உடலை இடம்மாற்றி வைத்து குழப்பியதால் பரபரப்பு!!

367

நாகியம்பட்டியில்..

சேலம் தம்மம்பட்டி போக்குவரத்து பணிமனை எதிரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புளியமரம் இருந்தது. சாலையை அகலப்படுத்துவதாக கூறி அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி நடந்தது.

நாகியம்பட்டி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த தொழிலாளி உத்தமசீலன் (40) என்பவர் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உத்தமசீலன் மீது மரம் விழுந்தது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் மரத்தை அகற்றி, அவரது உடலை மீட்டு, அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் போக்குவரத்து பணிமனை செல்லும் பாதையில் வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த பொலிசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மரத்தை வெட்டி அகற்ற உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அனுமதி பெறாமல் மரத்தை வெட்டியதால், அதை மறைப்பதற்காக இறந்த உத்தமசீலனின் உடலை இடமாற்றி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதை அறிந்த இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் பொலிசாரிடம், மரம் விழுந்ததால் இறந்தவரின் உடலை ஏன் இடமாற்றி வைத்தனர்?.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து ஆத்தூர் உதவி ஆட்சியர் சரண்யா உத்தரவின் பேரில் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.