அண்ணன் இறந்து 14 நாட்கள் : காட்டு யானை தாக்கி தங்கை மரணம்!!

898

கண்டி..

குடும்பத்தின் மூத்த மகன் திடீர் விபத்தொன்றில் உயிரிழந்து 14 நாட்கள் செல்லும் முன்னர் குடும்பத்தின் ஒரே பெண் பிள்ளை காட்டு யானை தாக்கி மரணமடைந்த சம்பவம் ஒன்று கண்டி மாவட்டம் ஹசலக யாய பஹா என்ற பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது.

17 வயதான அனுத்தரா இந்துனில் என்ற யுவதியே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த தனது ஒரே சகோதரனின் 14 வது நினைவு நாள் தானத்தை விகாரைக்கு கொண்டு செல்லும் வழியில் யுவதியின் வீட்டுக்கு எதிரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

யானை தாக்கிய பின்னர் யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக ஹசலக வைத்தியசாலையின் மருத்துவர்கள் கூறியுள்ளனர். யுவதியின் மரணம் தொடர்பில் அவரது உறவினரான பெண்ணொருவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

“அண்ணன் இறந்து 14 நாட்கள். 27 ஆம் திகதி இரவில் இருந்து காட்டு யானைகள் கிராமத்திற்குள் வந்திருந்தன. விடிய விடிய யானை வெடிகளை கொளுத்திய போதிலும் யானைகள் திரும்பிச் செல்லவில்லை.

நாங்கள் உறங்கவுமில்லை. வீட்டுக்கு எதிரிலேயே யானை தங்கையை தாக்கியது என்று அத்தை சத்தமிட்டார். எங்களால் வெளியிலும் வர முடியவில்லை. யானை விரட்டுவதே இதற்கு காரணம்.

யானை, யானை என்று மக்களுக்கு சத்தமிட மட்டுமே முடியும்” எனக் கூறியுள்ளார். தாயாருக்கு எதிரிலேயே யுவதியை யானை தாக்கியதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

யுவதியின் மரணம் காரணமாக தாய் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றார். இந்த அகால மரணத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் பொறுப்புக் கூற வேண்டும் என கிராமவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.