தமிழ் தேசிய முன்னணி (ஈரோஸ்) விடுத்துள்ள மேதின அறைகூவல்!!

847

thusiyanthan

தொடர்சியாக நீண்ட நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவேளை எட்டு மணித்தியாலமே வேலை செய்வோம் என்பதை வலியுறுத்தி அமெரிக்காவின் சிக்காகோவில் நடத்திய மாபெரும் போராட்டத்தின் வெற்றி நாளே இந்த மே தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் பேசும் மக்கள் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுப்பதிலும் தொடர்ந்து இரு தரப்புக்களாலும் ஏமாற்றப்பட்டு வருகின்ற வேளையில் தமிழ் பேசும் மக்களுக்கு புதிய அரசியல் தலமையொன்றின் தேவையொன்றைதொடர்ந்தே ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) தமிழ்த் தேசிய முன்னணி என 2013 சித்திரை 2ம் திகதி புதிய பரிநாமமெடுத்தது.

தமிழ்த் தேசிய முன்னணி தனது இரண்டாவது மேதினத்தை சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றது. குறிப்பாக இளைஞர்கள் எம்மோடு சேர்ந்து கைகோர்த்து நிர்ப்பதும் மக்கள் பெரும் ஆதரவாக உள்ளதும் மிக மகத்தானது. இந்த ஆதரவு எங்களுக்கு மேலும் நம்பிக்கையை கொடுத்திருக்கின்றது.

மேதினத்தை நினைவுகூறும் தொழிலாளர்கள் அவ்வுரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு பல மணித்தியாலங்கள் ஓய்வின்றி உழைக்கின்ற நிலை இன்று மேலோங்கி காணப்படுகிறது. ஆனால் எமது அடிப்படை தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவற்றைக்கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தொழிலாளர்கள் இன்றும் சிரமப்படுகின்றார்கள்.

அரசு எத்தனை வறுமை ஓழிப்பு திட்டங்களை அமுல்படுத்தினாலும் அதே அரசுதான் கிராமப்புறங்களில் மதுபானசாலைகளை நடாத்துவதற்க்கும் அனுமதிப்பத்திரங்களை முதலாளிவர்கத்துக்கு வழங்கிவருகின்றது. இது வறுமையை கூட்டுகின்றதே தவிர வறுமையை தணிக்க முடியாதுள்ளது. இவ்வாறாக மதுபானசாலைகளை நடாத்துவதற்க்கும் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை நிறுத்தக்கோரி நாம் ஒன்றுசேர்ந்து குரல் கொடுப்போம்.

வடக்கு கிழக்கில், தென்னிலங்கையிலிருந்து வரும் தொழிலாளர்களால் தமிழ் தொழிலாளர்களின் தொழில்களும் மீனவர்களின் தொழில்களும், வேலைவாய்ப்புக்களும் சுரண்டப்படுகின்றது. இதற்கு நிரந்திரத் தீர்வு காணப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மேதின நாளில் நாம் ஓங்கிக் குரல் கொடுப்போம்.

வடக்கு கிழக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பெரிதும் காணப்படுகிறது. இவர்களின் நிலை இன்று மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. யுத்தம் அவர்களுக்கு பல்வேறு புதிய சுமைகளை கொடுத்துள்ளதோடு ஒடுக்குமுறைகளையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந் நிலையில் சமூகமாக எமது பெண்களை பாதுகாக்கும் முயற்சியில் நாமும் ஈடுபடுவோம. அவர்களின் துயரங்களை சமூகத்தின் துயரங்களாக ஏற்று அவற்றிலிருந்து விலக ஓத்துழைப்புக்களை வழங்குவோம். நடைபாதை தொழிலாளர்களுக்கு தொழில் புரிவதற்காக நிரந்தரமான இடங்களை ஒதுக்கிக் கொடுப்பதோடு இடங்கள் வழங்கலின்போது முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தால் நலன்புரி நிலையம் என்கின்ற பெயரில் பிரதான வீதிகளிலும் சந்தைகளிலும் தேனீர்க் கடை தொடக்கம் சிகை அலங்கரிப்பு நிலையம் வரை இராணுவம் முன்னெடுப்பதால் வாழ்வாதர தொழில் புரியும் தொழிலாழர்களின் தொழில்கள் பாதிப்படைகின்றன. இதற்காக நாம் ஒன்றுசேர்ந்து குரல் கொடுப்போம்

சில சுயநல பாராளுமன்ற அரசியல்வாதிகளினாலும் தொழிற்சங்கவாதிகளினாலும் இலங்கையின் உழைக்கும் மக்களாகிய தொழிலாளர்கள் இன, மத, சாதி, ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் முதலாளித்துவத்திற்கு அடிமையாக்கப்பட்டுள்ளார்கள்.

மீள்குடியேற்றபட்ட வடக்கு கிழக்கு கூலித் தொழிலாளர்களுக்கு இன்னமும் சரியாக நிவாரணம் வழங்கப்படவில்லை. இன்றைய பெண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாவதும் பால் ரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகின்றனர். தனியார் துறை தொழிலாளர்கள் தொழில் தருநரின் தயவில் வாழ்பவர்களாக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்நாட்டின் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சுரண்டப்பட்டும், அடக்கப்படுகின்ற தேசிய இனங்களும் ஒடுக்கப்படுகின்ற பெண்கள் உட்பட ஏனைய பிரிவினரும் உரிமை மறுக்கப்பட்டவர்கள் என்ற பொதுவான அடிப்படையில் ஐக்கியப்பட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்காய் ஓரணிதிரள்வோம் என தமிழ்த் தேசிய முன்னணி தனது மேதின அறைகூவலை விடுக்கின்றது.

ச.துஸ்யந்தன்
தலைவர்
தமிழ் தேசிய முன்னணி