வரதட்சணையை கேட்டு கொடுமை செய்த கணவன்… இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

1621

சேலத்தில்..

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (29). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் சேத்தமங்கலத்தை சேர்ந்த அரவிந்த் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

லாரி உரிமையாளரான அரவிந்துக்கு மது அருந்தும் பழக்கம் அதிகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் ஆன இரண்டு மாதத்திலேயே குடும்பத்தகராறு ஏற்பட்டு மனோன்மணி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மேலும் அவர் பெற்றோர்களிடம் அவரது கணவர் குடித்துவிட்டு வந்து டார்ச்சர் செய்வதால் இனி கணவனுடன் வாழ மாட்டேன் என்று கூறி பெற்றோர்களுடனே இருந்துள்ளார்.

தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த மனோன்மணி நேற்று மாலை அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் உடம்பில் அவரே தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது ஒரு புறம் இருக்க மனோன்மணி மருத்துவமனையில் இருக்கும்போது கணவர் செய்த சித்திரவதை குறித்து பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில், தனது கணவர் தினமும் மது அருந்திவிட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், இரவு முழுவதும் தூங்கவிடாமல் டார்ச்சர் செய்து வந்ததாகவும், தனக்கே தெரியாமல் தனக்கு ஊசிகள் போட்டு மயக்கம் அடைய வைத்து ஆடைகளை கிழித்து சித்திரவதை செய்ததாகவும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் கூறி உள்ளார்.

இது தொடர்பாக மனோன்மணியின் தம்பி ராஜேந்திரன் கூறுகையில், திருமணமான இரண்டு மாதத்தில் பலமுறை அவரது சகோதரியை அரவிந்த் அடித்து துன்புறுத்தி நகை கேட்டு விரட்டியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மனோன்மணி வீட்டுக்கு வந்த பிறகு அவர்கள் கொடுத்த 35 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணத்தை கேட்டபோது தர மறுத்து விட்டதாகவும் கூறினார்.

மேலும் அரவிந்தன் சைக்கோ போன்றே நடந்து கொண்டதாகவும், தொடர்ந்து சித்திரவதை செய்ததால் தனது சகோதரி தாய் வீட்டிற்கு வந்ததாகவும் கணவர் மனம் மாறி சகோதரியை அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்து இருந்ததால் இது தொடர்பாக புகார் அளிக்வில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் தற்போது மனோன்மணி இறந்ததை அடுத்து போலீசார் முறையான பிரிவில் வழக்கு பதிவு செய்யாததால் அவர் சடலத்தை வாங்க மறுத்து விட்டோம் எனக் கூறியுள்ளார்.