மலேசியா விமானம் தேடும் பணி நிறைவு : தேடுதல் விமானங்களும், கப்பல்களும் நாடு திரும்புகின்றன!!

278

Flight

கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதியன்று 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் எம்ஹெச் 370 விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மாயமாக மறைந்தது. தெற்கு இந்தியப் பெருங்கடலினுள் அந்த விமானம் விழுந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தில் உலக நாடுகள் பலவும் அவுஸ்திரேலியா தலைமையில் அந்த விமானத்தைத் தேடி வந்தன.

ஆனால் 50 நாட்கள் கடந்த பின்னரும் விமானத்தின் உடைந்த பகுதிகளோ, கறுப்புப் பெட்டியோ எதுவுமே கிடைக்காத நிலையில் விமானத் தேடல்களிலேயே மிகுந்த பொருட்செலவு கொண்டதாக இந்தத் தேடுதல் வேட்டை அமைந்தது.

இந்த நிலையில் காணாமற்போன விமானம் குறித்த தீவிர வான்வழித் தேடல்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூர இந்தியப் பெருங்கடலில் மையம் கொண்டிருந்த தேடுதல் கப்பல்களும் திரும்பத் தொடங்கியுள்ளன.

அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, மலேசியா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா. இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய எட்டு நாடுகளின் விமானங்களும் 300 இற்கும் மேற்பட்ட முறை விமானத்தின் உடைந்த பாகங்களைத் தேடும் பணியில் இந்தியப் பெருங்கடல் மீது பறந்துள்ளன.

கடந்த மாதம் 18ஆம் திகதியிலிருந்து 4.5 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு மேற்பட்ட கடற்பரப்பில் தேடுதல் வேட்டையில் பலன் எதுவும் இல்லாத நிலையில் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான விமானங்கள் இன்று சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று தேடுதல் ஒருங்கிணைப்பு மையத்தின் தகவல் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

எனினும் பெர்த்தில் அவுஸ்திரேலியாவின் பி-3 ஓரியன் விமானம் மட்டும் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார். அவுஸ்திரேலியா, சீனா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த 14 கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தன. இவையும் துறைமுகத்திற்குத் திருப்ப அனுப்பப்பட்டு அவற்றிற்கான எரிபொருள் நிரப்பப்படும் பணி நடைபெறும்.

இந்தக் கப்பல்களில் இருந்த ஊழியர் குழுக்களுக்கும் ஒய்வு அளிக்கப்படும். சில கப்பல்கள் மட்டுமே அந்தப் பகுதியில் நிலைநிறுத்தப்படும். மொத்தத்தில் எம்ஹெச் 370 குறித்த வான்வழி மற்றும் கடற்பரப்பு தேடுதல்கள் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.