கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவன் : கண் கலங்க வைக்கும் அவலம்!!

550

மத்திய பிரதேசத்தில்…

மத்திய பிரதேச மாநிலம் , தாமோ மாவட்டத்திற்குட்பட்ட ரானே கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் அஹிர்வார். கர்ப்பிணியான இவரது மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கைலாஷ் அஹிர்வார் அரசு ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் என்ன செய்வது என்று முதலில் புரியாமல் இருந்துள்ளார். பின்னர் கைலாஷ் அஹிர்வார் கிராமத்திலிருந்த தள்ளுவண்டியில் மனைவியைப் படுக்கவைத்து அதைத் தள்ளிக் கொண்டு அருகே இருந்த சுகாதார மையத்திற்கு வந்துள்ளார்.

ஆனால், அங்கு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து வேறு மருத்துவமனையில் மனைவியைச் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கும் சரியான சிகிச்சை அளிக்காததால் அவர் டாமோ மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்ப்பிணி மனைவியைத் தள்ளுவண்டியில் வைத்து கணவன் தள்ளிவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்துச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் கடந்த வாரம் இதேபோன்று ஒரு சம்பவத்தை வெளியிட்ட 3 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.