விசாரிக்க வந்த காவலரை கடித்த பெண்… பரபரப்பூட்டும் அதிர்ச்சி சம்பவம்!!

501

சென்னையில்..

திருவொற்றியூர் பகுதியில் காதலன் வீட்டு முன்பு ரகளையில் ஈடுபட்ட பெண்ணை விசாரிக்க சென்ற போலீசாரின் கையை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, திருவொற்றியூர், எஸ்பி கோயில், முதலாவது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திர மோகன்.

இவரது மனைவி ரேணுகா (53). இவர்களின் மகன் ரேவேந்திரகுமார் (35) என்பவரும் பூண்டிதங்கம்மாள் தெரு, டி பிளாக்கை சேர்ந்த செல்லப்பன் மகள் செல்வியும் (31) கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர்.

இருவரது பெற்றோர்களும் இவர்களது காதலை ஏற்றுக்கொண்ட நிலையில் கடந்த 2021ம் ஆண்டு, ஜனவரி மாதம் 17ம் தேதி அன்று நிச்சயம் செய்து முடித்தனர். அப்போது, செல்வி, புது விதமாக, மாப்பிள்ளை வீட்டாரிடம் 5 சவரனில் தாலி சரடு, பைக், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை வரதட்சணையாக கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை குடும்பம் ” மருமகளாய் வருவதற்கு நீதான் வரதட்சணை கொடுக்க வேண்டும், என் மகன் எப்படி தருவான்? என கேட்டு தாய் ரேணுகா திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இதனால், ஆத்திரம் வரும்போதெல்லாம், செல்வி, ரேவந்திர குமார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபடுவாராம். இந்த நிலையில், நேற்றும், ரேவேந்திரகுமார் வீட்டிற்கு சென்ற செல்வி, தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக, கடும் ரகளையில் ஈடுபட்டார். இதனால், அவர்கள், போலீசுக்கு தகவல் தந்தனர்.

இதனை அடுத்து திருவொற்றியூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு தலைமை காவலர் சரவணன் (45) மற்றும் போலீசார் அங்கு சென்றனர். செல்வியிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர். தொடர்ந்து செல்வி ரகளையில் ஈடுபட்டு, போலீசாரை , தன் செல்போனில் வீடியோ எடுத்தார். அதை பிடுங்க முயற்சித்த போது, சரவணனின் இடது கையை செல்வி கடித்து, அவரின் சீருடையை கிழித்தார்.

இதையடுத்து, செல்வியை கைது செய்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், வழக்கு பதிவு செய்து, செல்வியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விசாரிக்க வந்த காவலரை கடித்து சீருடையை கிழித்த பெண்ணின் செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கவுன்சிலிங் வழங்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.