உடைந்திருந்த பற்கள்… கல்லூரி மாணவி பரிதாப மரணம் : அதிர்ச்சி சம்பவம்!!

412

வேப்பேரியில்..

சென்னை, வேப்பேரியில் உள்ள ஜெயின் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வேப்பேரி பகுதியை சேர்ந்தவர் சர்மா. இவர், மின்ட் பகுதியில், மருந்தகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சீமா சர்மா. இவர்களின் மகள் ரோஷினி சர்மா (19). இவர், வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயின் கல்லூரியில், பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று கல்லூரியில், மூன்றாம் ஆண்டுக்கான வகுப்பு துவங்கியது. காலை 8மணிக்கு ரோஷினி சர்மா கல்லூரி சென்றார். அப்போது, நான்காவது மாடிக்கு சென்ற ரோஷினி சர்மா மீண்டும் வகுப்புக்கு வரவில்லை.

இதன் பிறகு அந்த வழியாக பெண் பேராசிரியர் ஒருவர் சென்றபோது அங்கு ரோஷினி சர்மா ரத்த வெள்ளத்தில் மயங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் கத்தி கூச்சலிட்டார். கல்லூரி ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஓடி வந்தனர். தகவல் கிடைத்து, வேப்பேரி போலீசாரும் விரைந்து வந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் , ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சோதனை செய்தபோது, ரோஷினி சர்மாவின் பற்கள் உடைந்திருந்தன.

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தாரா என தெரியவில்லை.. ஆனால், பலத்த காயமடைந்த அவர் 20 நிமிடம் அங்கேயே உயிருக்கு போராடியிருந்துள்ளார். முன்கூட்டியே அவரை பார்த்திருந்தால், காப்பாற்றி இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், போலீசார், ரோஷினி சர்மாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி முதல் நாளில், மாணவி ஒருவர் இறந்தது வேப்பேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது