மனைவியை ஊசியால் குத்தி குத்தி சித்ரவதை செய்த சைக்கோ கணவன்.. மனைவியின் விபரீத முடிவு!!

387

சேலத்தில்..

சேலம் மாவட்டம் பொன்னம்மா பேட்டை வீராணம் சாலையில் வசித்து வருபவர் ராமசாமி. இவரின் மகள் மனோன்மணிக்கும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர் அரவிந்த்-க்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.

மதுபோதைக்கு அடிமையான அரவிந்த் அதனை மறைத்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு அரவிந்த்தின் உண்மையான முகம் மனோன்மணிக்கு தெரியவர, இது குறித்து இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த், மனோன்மணியை அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார்.

இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் கணவனின் தொல்லை தாங்கமுடியாமல் மனமுடைந்து போன மனோன்மணி, ஜனவரி மாதம் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். தனது வாழ்க்கையை எண்ணி மன உளைச்சலில் இருந்த மனோன்மணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், அதிகப்படியான தீக் காயங்களால் சிகிச்சை பலனின்றி மனோன்மணி உயிரிழந்துள்ளார்.

முன்னதாக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்த போது, மனோன்மணி தனது வாக்குமூலத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், தனது கணவர் அரவிந்த் இரவு நேரங்களில் தனது ஆடைகளை கிழித்து ஊசியால் குத்தி சித்ரவதை செய்ததாக கூறியுள்ளார். இது குறித்து அரவிந்த்தின் பெற்றோரிடம் கூறியும் கூட, அவர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனவும் மனோன்மணி அந்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மனோன்மணியின் மரண வாக்குமூலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் மனோன்மணியை சித்ரவதை செய்த அவரது கணவர் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.