
சென்னையில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 12 பேர் காயமடைந்துள்ளனர்.
சென்னையின் முக்கிய ரயில் நிலையமான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை 7.15 மணி அளவில் 9வது மேடைக்கு வந்து சேர்ந்த பெங்களுர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 குண்டுகள் வெடித்தன.
இதில் சுவாதி (22) என்ற பெண் உயிரிழந்தார் இவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் மேலும் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இருவரின் நிலை கவலைக்கிடம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், வெடித்த இரு குண்டுகளும் குறைந்த சக்தி கொண்டவை. குண்டுவெடிப்பிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை, மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் முக்கிய ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.





