ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாயாக அதிகரிப்பதா இல்லையா? இன்று தீர்மானம்!!

461

பாணின் விலை..

ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாயாக அதிகரிப்பதா, இல்லையா? என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வர்த்தக அமைச்சருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதன்போது கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தமது உற்பத்திப் பொருட்களுக்கான தேவை ஏற்கெனவே 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக என்.கே.ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, பேக்கரி பொருட்களின் விலையை மேலும் உயர்த்தினால், தொழில்துறை வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை சந்தையில் கோதுமை மாவின் தட்டுப்பாடு மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாயாக அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த சனிக்கிழமை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.