கண்டங்கள் தாண்டி ஜெயித்த காதல்… தமிழ் இளைஞனை காதலித்து திருமணம் செய்த பிரான்ஸ் பெண்!!

513

காரைக்குடியில்..

பிரான்சு நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து கரம் பிடித்திருக்கிறார் காரைக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர். இரு வீட்டார் சம்மதப்படி இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது.

மனிதகுலம் கடல்தாண்டி பயணிக்க துவங்கிய போதே, காதலும் அந்த பயணத்தில் இணைந்துவிட்டது. வேறுபாடுகளை கடந்து மனங்களை ஒன்றிணைக்கும் காதல் எந்த சட்டகத்திற்குள்ளும் அடங்குவதில்லை. இது மீண்டும் மீண்டும் உலகில் நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் காரைக்குடியை பூர்வீகமாகக்கொண்ட இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து கரம் பிடித்திருக்கிறார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரை சேர்ந்தவர் தங்கராசு. விவசாய குடும்பத்தில் பிறந்த தங்கராசு மாணிக்கவள்ளி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு கலை ராஜன் என்ற மகன் இருக்கிறார். பிரான்சில் பணிபுரிந்து வரும் தங்கராசு அங்கே தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவருடைய மகன் கலை ராஜன் அங்குள்ள கல்லூரி ஒன்றில் கம்பியூட்டர் சைன்ஸ் படித்து வந்தார்.

அப்போது கயல் என்னும் இளம் பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இது காதலாகவும் மலர்ந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்களது வீட்டில் இதுகுறித்து பேசியுள்ளனர்.

இருவர் வீட்டிலும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவே திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன. இதனையடுத்து, மணமகன் கலை ராஜனின் சொந்த ஊரான அமராவதி புதூரில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதற்காக மணமகள் கயலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து காரைக்குடி வந்திருக்கின்றனர்.

இந்த திருமணத்தில் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மணமகன் வீட்டில் நடைபெற்ற இத்திருமணத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.