தொடர் கனமழையால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

289

வெள்ளத்தில்..

தொடர் கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய இளம்பெண் ஒருவர், அங்கிருந்த மின்கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதனால் பெங்களூர் மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிப்பதுடன் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் சித்தாபுரா பகுதியில் வசித்து வரும், அகிலா( 23) என்ற இளம்பெண் மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் வழக்கம் போல தனது பணி முடிந்து நேற்று மாலை சுமார் 6:30 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த சுற்று வட்டார பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால் சாலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்பொழுது அகிலா தனது இரண்டு சக்கர வாகனத்தில் தட்டு தடுமாறி வீடு திரும்பி கொண்டிருக்கும் போது சாலையில் சித்தாபுர மயூரா பேக்கரி அருகே சற்று தடுமாற்றம் ஏற்பட்டது.

இதனால் சாலையில் விழுவதை தவிர்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் அருகில் இருந்த மின் கம்பத்தை தாங்கிப் பிடித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் மீது மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து அகிலா துடிதுடித்து கீழே விழுந்தார்.

இதை கண்ட அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சோக சம்பவத்திற்கு பெங்களூர் மாநகராட்சியும் பெங்களூர் மின் பகிர்மான துறையுமே முழு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.