இறந்த தாயின் உடலை சக்கர நாற்காலியில் வைத்து மயானத்திற்கு கொண்டு வந்த மகன்!!

331

திருச்சியில்..

திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. சுமார் 90 வயதை எட்டிய இவரது மனைவி ராஜேஸ்வரி. தம்பதியினர் இருவரும் மகன் முருகானந்தத்துடன் வசித்து வந்தனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல் நலம் பாதிக்கவே அவரை மகன் முருகானந்தம் தன்னுடன் வைத்து கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த ராஜேஸ்வரி இன்று அதிகாலை இறந்து விட்டார்.

வறுமை ஒருபுறம், அறியாமை மறுபுறம் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த முருகானந்தம் அக்கம் பக்கத்தினர் என யாரிடமும் ஏதும் சொல்லாமல் உடலை தகனம் செய்ய முடிவு செய்தார்.

அதற்காக தன் தாயின் உடலை ஒரு வீல் சேரில் அமர்ந்திருப்பது போல் வைத்து உடலை சுற்றி துணியால் கட்டினார். பின்னர் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் உள்ள மணப்பாறை நகராட்சியின் எரிவாயு தகன மேடை அமைந்துள்ள செவலூர் பிரிவு சாலைக்கு எடுத்து சென்றார்.

பொழுது விடிவதற்குள் உடலை எடுத்து சென்ற முருகானந்தம் தகனம் செய்திட எரிவாயு தகன மேடை பராமரிப்பாளரான ஸ்ரீதரனுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே சுடுகாட்டின் அருகே உள்ளவர்கள் பார்த்த போது இறந்த மூதாட்டியின் உடல் வீல் சேரில் எடுத்து வந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சுடுகாட்டிற்கு வந்த பராமரிப்பாளர் பார்த்து அரசின் பல்வேறு உதவிகள் உள்ள நிலையில் ஏன் இது போன்று வீல் சேரில் உடலை கொண்டு வந்தீர்கள்? என்று கேட்டார். அப்போது தெரியாமல் இதுபோன்று செய்து விட்டேன் என்று கூறினார். பின்னர் எரிவாயு தகன மேடை பணியாளர் உடலை பெற்றுக்கொண்டு முறைப்படி இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்தார்.