
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மூச்சு திணறடித்துக் கொலை செய்ததை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வாய் தவறி கூறிய பெண் கைதாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பெண் பேபிகலா. இவரது கணவர் பெயர் ராதாகிருஷ்ணன். இவருக்கும் கெளரிசங்கர் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் மூண்டது. கணவர் இல்லாத நேரங்களில் வீட்டுக்கே அழைத்து வந்து கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.
ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் குடிக்கு அடிமையானார். வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தார். இது கள்ளக்காதலர்களுக்கு இடையூறாக மாறியது. இதனால் ராமகிருஷ்ணனைப் போட்டுத் தள்ளத் தீர்மானித்தார் கெளரிசங்கர்.
இதையடுத்து 2010ம் ஆண்டு ஜூலை 17ம் திகதி பேபிகலாவும் கெளரிசங்கரும் சேர்ந்து பிளாஸ்டிக் பையால் ராதாகிருஷ்ணன் முகத்தை மூடி மூச்சுத் திணறடித்துக் கொலை செய்தனர். பின்னர் மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடினார் பேபிகலா.
இந்த நிலையில் கள்ளக்காதலன் கெளரிசங்கர், பேபிகலாவை விட்டு விட்டு வேறு பெண்களுடன் பழக ஆரம்பித்தார். திருமணத்திற்கும் தயாராகி விட்டதால் கோபமடைந்த பேபிகலா பிரபல தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியை அணுகினார்.
அந்த நிகழ்ச்சியில் தனது கதையைச் சொல்லிப் புலம்பினார். மேலும் கெளரிசங்கர் தனது கணவரைக் கொன்று விட்டதாக குற்றம் சாட்டினார்.ஆனால் இந்த புகாரின்போது வாய் தவறி தானும் கொலைக்கு உடந்தையாக இருந்ததைக் கூறி விட்டார் பேபிகலா.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராதாகிருஷ்ணனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பேபிகலாவைப் பொலிஸார் கைது செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேபிகலா பேசுகையில் பல திடுக்கிடும் தகவல்களையும் தெரிவித்தார். அதாவது கெளரிசங்கர் தன்னை விட்டு விட்டு வேறு திருமணம் செய்யவிருந்ததாக கூறிய அவர் கெளரிசங்கரைக் கொலை செய்ய தான் திட்டமிட்டதையும் ஒப்புக் கொண்டார்.
அவரைக் கொல்ல திட்டமிட்டு வந்ததாகவும், இதற்காக 1 லட்சம் வரை பணம் சேர்த்து வைத்திருந்ததாகவும் கூறிய தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




