மனைவி தீக்குளித்து தற்கொலை… ஓராண்டு கழித்து அதே நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்!!

439

சென்னையில்..

ஓராண்டு காலமாக மனைவியின் நினைப்பிலேயே வாழ்ந்து வந்த ரவுடி அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலியன்று தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை சூளைமேடு ராஜா புரனிகர் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி பிரசாந்த்(34).

இவர் மீது சூளைமேடு காவல் நிலையத்தில் ஒரு கொலைவழக்கும், கோடம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த ஆண்டு இவரது மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனையடுத்து இவர், சூளைமேடு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடிசை வீட்டில் இருந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்துள்ளார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீட்டில் வசித்து வந்த இவரது சகோதரர் பிரதீப் என்பவர் வெளியே வந்து பார்த்துள்ளார். வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து பிரதீப் காவல் கட்டுப்பாட்டறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவம இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, உடலில் தீக்காயத்துடன் இருந்த பிரசாந்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய தடுப்பு பிரிவில் அனுமதித்தனர்.

இதனையடுத்து கோடம்பாக்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரசாந்தின் மனைவி குளோரி கடந்த ஆண்டு இதே நாளில், இருவருக்கும் இடையேயான பிரச்னையில் தீக்குளித்து இறந்துவிட்டதாகவும் நேற்று மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் எனவும் தெரியவந்துள்ளது.

ரவுடி பிரசாந்த், கடந்த ஓர் ஆண்டாக மனைவியின் ஞாபகமாகவே இருந்து வந்துள்ளார் எனவும் எப்போதும் மனைவியை பற்றியே சக நண்பர்களிடத்தில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், துக்கம் தாங்காமல் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போலவே ரவுடி பிரசாந்தும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரவுடி ஒருவர் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவரது நினைவு நாளிலேயே தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.