இறந்த மகள் தூரிகை பற்றி பாடலாசிரியர் கபிலனின் கண்கலங்க வைத்த பதிவு!!

482

தூரிகை..

பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகளை நினைத்து கவிலன் வெளியிட்டுள்ள கவிதை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தமிழில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் கபிலன், இவருடைய மகள் தூரிகை. இவர் எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர். ஆங்கில இதழ் ஒன்றை அண்மையில் தொடங்கியிருந்தார்.

இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பதிவினை போட்டிருந்த இவரா இந்த முடிவை எடுத்துள்ளார் என்ற கேள்வி தற்போதும் அனைவரையும் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் கபிலன், தன் மகள் தூரிகை குறித்து எழுதிய உருக்கமான கவிதைகளை தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கபிலன் எழுதிய கவிதையில், “எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக்கொண்டால் நான் எப்படி தூங்குவேன்” , “எங்கே போனாள் என்று தெரியவில்லை, அவள் காலணி மட்டும் என் வாசலில்” , “மின்விசிறி காற்று வாங்குவதற்கா… உயிரை வாங்குவதற்காக.?” , “அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன்,

எறும்பாய்..?” , “அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா எனக்கு தெரியாது, அவளே என் கடவுள்..!” , “யாரிடம் பேசுவது.. எல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்..” , “பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான்..!” என்று மறைந்த தம் மகள் தூரிகை குறித்து கபிலன் கண்ணீரால் கவிதை வடித்துள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தூரிகை கடந்த 2020ம் ஆண்டு தற்கொலை விழிப்புணர்வு குறித்த பதிவினை பதிட்டிருந்தார். அதில், “வாழ்க்கையில் எல்லா முடிவுகளுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. ஆனால் ஒன்றை முடித்துக் கொள்வது என்பது எஞ்சிய பயணத்தை முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.

தற்கொலை என்பது எந்த பிரச்சினைக்கும் முடிவல்ல. நீங்கள் தற்கொலை செய்வதால் அணு அளவும் எதுவும் மாறிவிடப் போவதில்லை. வாழ்க்கையை இழக்கிறோம். மகிழ்ச்சியை இழக்கிறோம். அனுபவங்களை இழக்கிறோம். இன்பத்தை இழக்கிறோம். சிரிப்பு இழக்கிறோம். வாழ்க்கையை முழுமையாக இழக்கிறோம்.

உங்களை அறிந்தவர்கள் உங்களுடைய இழப்பினால், ஓரிரு நாள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு தங்களுடைய ஆற்றாமையை வெளிப்படுத்துவார்கள். அதன் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள்.

ஆனால் பெற்றோருக்கு அது ஈடு செய்ய முடியாத வலி. நீங்கள் உங்கள் நினைவுகளை மட்டுமே அவர்களுக்கு கொடுத்துவிட்டு, கடைசி வரை அவர்கள் தனிமையில் தவிக்க விட்டு செல்கிறீர்கள். பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இன்னும் வலிமையுடனும் துணிச்சலுடனும் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.