பாகிஸ்தான் உளவாளி முகமது ஜாகீர் உசேன், என்பவரோடு தொடர்பு வைத்திருந்த மேலும் 2 பேர் நேற்று அதிகாலையில் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டின் பயங்கர உளவாளி முகமது ஜாகீர் உசேன், என்பவர் கைது செய்யப்பட்டார். கியூ பிரிவு பொலிஸார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் 6 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த, அனுமதி கேட்டு, கியூ பிரிவு பொலிஸார், நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், ஜாகீர் உசேனோடு தொடர்பு வைத்திருந்த மேலும் 2 பேர் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவரது பெயர் சிவபாலன் (39), இன்னொருவர் முகமது சலீம் (37).
சிவபாலன் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர். சலீம் சென்னை ராயபுரத்துக்காரர். தியாகராய நகரில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர்கள் இருவரிடம் இருந்தும் 2½ லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பொலிஸார் கைப்பற்றினார்கள்.
இவர்கள் இருவரும், நேற்று அதிகாலையில் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.





