அரியலூரில்..
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே மதுஅருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞரை பேட்டால் அடித்துக்கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே உள்ள பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் விக்னேஷ்(25).
இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சித்து வந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு வீட்டில் இருந்த விக்னேஷுக்கு, தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள் மது அருந்து அழைத்துள்ளனர்.
இதனை அடுத்து, வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற விக்னேஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்த நிலையில், மல்லூர் அருகே காட்டு பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் விக்னேஷ் சடலமாகி கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பழூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் விக்னேஷின் நண்பர்களான, அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மெலிந்த தேகமும், திக்குவாயும் கொண்ட தர்மராஜை, விக்னேஷ் அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளார்.
மேலும், விராட் கோலியின் தீவிர ரசிகரான விக்னேஷ், மது அருந்தியபோது, தர்மராஜுக்கு பிடித்த ரோகித் சர்மா குறித்து அவதுறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ், தான் வைத்திருந்த பேட்டால் விக்னேஷின் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார், தர்மராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.