காதலனை ஏவி கணவனை கொலை செய்து வீடியோ அழைப்பில் ரசித்த மனைவி : அம்பலமான நாடகம்!!

322

தமிழகத்தில்..

என் கணவரை எந்த படுபாவியோ கொலை செய்துவிட்டான் என்று கதறி அழுததை பார்த்த காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். கணவன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை மனைவி விஜயசாந்தி வீடியோ காலில் ரசித்தது பொலிசாரின் விசாரணையில் தெரியவந்தது.

தமிழகத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காதலனை ஏவி கணவனை கொலை செய்ய வைத்து அதனை வீடியோ காலில் பார்த்து ரசித்த மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வேடசந்தூர் ஜி.நடுப்பட்டியை சேர்ந்த விஜயசாந்தியும், சந்தைப்பேட்டையை சேர்ந்த நவீன் குமாரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 6 வயதில் மகனும் 3 வயதில் மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக விஜயசாந்தி கணவருடன் கோபித்துக் கொண்டு வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள சாலையூர்- நால்ரோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு தனது குழந்தைகளுடன் சென்றார்.

இந்த நிலையில், கடந்த 2 வருடமாக மனைவியை பிரிந்து வாழ்ந்துவந்த நவீன்குமார், கோடாங்கிப்பட்டி பகுதியில் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடப்பதாக கிராம மக்கள் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வேடசந்தூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த நவீன் குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த நவீன் குமாரின் மனைவி விஜயசாந்தி, என் கணவரை எந்த படுபாவியோ கழுத்தறுத்து கொலை செய்துவிட்டான் என்று கதறி அழுது கொண்டு ஓடி வந்தார்.

அவர் அழுததை பார்த்த காவல்துறையினர் சந்தேகம் அடைந்து அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து துருவித் துருவி விசாரித்தனர். விஜயசாந்தியிடம் நடத்திய விசாரணையில் நவீன் குமார் கொலைக்கான மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது.

கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த விஜயசாந்தி, கணவருடனான காதல் கசந்ததால் உருவான குடும்பப் பிரச்சனையை போக்குவதற்கு குறி சொல்லும் சாமியார் சிவாவிடம் சென்றபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

பிரிந்து வாழ்ந்த மனைவி விஜயசாந்தியை பார்க்க வந்த போதெல்லாம் கணவர் நவீன்குமார் சண்டையிட்டு செல்வதை வாடிக்கையாக்கியதால் கணவர் மீது தீராத கோபம் கொண்டு அவரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு ‘குரிச்சொல்லி’ சிவாவை ஏவியுள்ளார்.

அதன் படி சிவா லோடு மேன் போல வேடமிட்டு, நவீன் குமாருடன் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். பின்னர் பழக்கத்தை பயன்படுத்தி மது அருந்த அழைத்துச் சென்று போதை தலைக்கேறிய நிலையில் கத்தியை எடுத்து நவீன்குமாரின் கழுத்தை கொடூரமாக அறுத்துக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பின்பு தனது காதலி விஜயசாந்திக்கு போன் செய்து இத்தோடு பிரச்சினை முடிந்து விட்டது என்று கூறியதாகவும், ஆனால் அதை நம்பாத காதலி விஜயசாந்தியிடம் வீடியோ கால் மூலம், நவீன்குமார் கழுத்தருக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை காண்பிக்க அதனை பார்த்து விஜயசாந்தி ரசித்தது பொலிசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து விஜயசாந்தியையும், ஒட்டன்சத்திரத்தில் பதுங்கி இருந்த சிவாவையும் பொலிஸார் கைது செய்து, கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.