
உத்தரபிரதேசத்தில் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஆயுதபடை மைதானத்தில் நேற்று பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரசார பொதுகூட்டம் நடைபெற்றது. மோடி தனது பேச்சை தொடங்கினார்.
அப்போது பாதுகாப்பு பொலிசார் அமர்ந்திருந்த வரிசையில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோடி ஒழிக என்று கோஷமிட்டபடியே மோடியை நோக்கி செருப்பை வீசியெறிந்தார்.
ஆனால் மேடைக்கும், பொலிசாரின் பாதுகாப்பு தடுப்பு வேலிக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி காணப்பட்டதால் செருப்பு மேடையில் இருந்து சற்று தள்ளி தொலைவிலேயே விழுந்தது.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. உடனடியாக பொலிசார் செருப்பு வீசிய திசையை நோக்கி விரைந்தனர். ஆனால் அங்கு அந்த ஆசாமியை அடையாளம் காணமுடியவில்லை.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொலிசாரும், பாஜ தலைவர்களும் தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
பின்னர் தொடர்ந்து மோடி பேசினார். மோடியை நோக்கி செருப்பு வீசப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.




