இருசக்கர வாகனம் மோதியதில் 10 வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி!!

372

நாகர்கோவிலில்..

சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் விபத்துக்கள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அவர்களின் மன அழுத்தமே காரணம் என மனவியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை களையும் வகையில் பள்ளிகளில் நன்னடத்தை வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் மாணவர்கள் அலட்சியத்தால் அசம்பாவிதங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. அதே போல் ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளம் பகுதியில் வசித்து வருபவர் அந்தோணி குமார் ராஜ். தையல்காரரான இவருக்கு ஜெர்வின் ஸ்டார் (15) என்ற மகன் உள்ளார்.

இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் ஜெர்வின் ஸ்டார் தனது தாயாரை பழவிளை அருகே புல்லுவிளையில் உள்ள தொழிற்சாலைக்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்றார்.

அங்கு தாயாரை இறக்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த ஜெர்வின், பருத்திவிளையில் நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் சாலையை கடக்க முயன்றார். அப்போது பருத்திவிளையில் இருந்து எறும்புகாடு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் ஜெர்வின் ஸ்டார் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாலையில் ஜெர்வின் ஸ்டார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வேம்பனூர் புளியடி காலனியை சேர்ந்த மணி மகன் காட்வின் (20), பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் புளியடி காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் ஆகாஷ் (16) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

அவர்கள் இருவரும் ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது