மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை : இராஜாங்க அமைச்சர் மஸ்தான்!!

643


மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.



வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இன்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

அரசாங்கத்தால் பல மில்லியன் ருபாய்கள் செலவு செய்து பொருளாதார மத்திய நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை அந்த மாவட்ட மக்களோ அல்லது ஏனைய மக்களோ பயன்படுத்தாது சேதமடைந்து வருகிறது.



எமது அமைச்சுக்குட்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. மக்கள் பாவனைக்கு விடுவதற்காக நேரடியாக சென்று அப் பொருளாதார மத்திய நிலையங்களில் என்ன பிரச்சனை என ஆய்வு செய்து வருகின்றேன்.



இதன்பின் அரச அதிபர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள், வியாபாரம் செய்பவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி விரைவாக திறப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.


ஏனைய மாவட்ட பிரச்சனை வேறு. இங்கு வேறு பிரச்சனை. பொருளாதார மத்திய நிலையத்திற்குரிய கடைகளை இன்னும் வழங்கவில்லை. விவசாயிகள், மரக்கறி விபாபாரிகள் ஆகியோருக்கு இதனை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.