கன்று ஈனாமலேயே 24 நேரமும் பால் கறக்கும் தெய்வீக பசு.. ஆசிர்வாதம் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்!!

605

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டத்தில் கன்று ஈனாமலேயே பசு ஒன்று 24 மணி நேரமும் பால் கறப்பதை மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50).

இவரது மனைவி மயில் (வயது 46) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பெருமாள் விவசாயம் பார்த்து வருவதோடு கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இவர் கன்றுக்குட்டி ஒன்றை வாங்கி வளர்த்து வந்திருக்கிறார்.

குறிப்பிடத்தகுந்த அளவு அந்த கன்றுக்குட்டி வளர்ந்த உடன் பால் கறக்க துவங்கியிருக்கிறது. கன்றும் ஈனாமலும் சினை ஊசியும் போடாமலும் தனது பசுமாடு பால்கறப்பதை அதிசயத்துடன் பார்த்திருக்கிறார் பெருமாள்.

தொடர்ந்து அவ்வப்போது மாட்டையும் பரிசோதிக்க 24 மணி நேரமும் அந்த பசு மாடு பால் கறப்பதை கண்டு அதிசயப்பட்டிருக்கிறார் அவர். சில நாட்களிலேயே இந்த செய்தி அந்த வட்டாரம் முழுவதும் பரவி இருக்கிறது.

இதனையடுத்து 24 மணி நேரமும் பால் கறக்கும் இந்த பசு மாட்டை காண பொதுமக்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். மாட்டின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் பொதுமக்கள், இந்த மாடு தெய்வீக சக்தி வாய்ந்தது என்றும் நம்புகிறார்கள்.

இந்த மாட்டை தினந்தோறும் குளிப்பாட்டி மஞ்சள், குங்குமத்தோடு அலங்கரிக்கும் பெருமாள். இதன் பாலை ஊர் மக்களுக்கும் அளித்துவருகிறார். இதுபற்றி பேசிய பெருமாள்,”நான் கூலிவேலை செய்துவந்தேன். முன்னர் பலவித பிரச்சினைகளில் சிக்கி கஷ்டப்பட்டு வந்தேன்.

இந்த பசு வந்தபிறகு அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துள்ளது. தற்போது ஒரு முதலாளி ஆனதுபோல் நம்பிக்கையோடு உள்ளேன். இந்த பசுவை காண தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதன்மூலம் அவர்கள் நன்மை அடைந்தும் வருகின்றனர். இது எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது” என்கிறார்.

இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களது வீடுகளில் ஏதேனும் கஷ்டம் என்றால் இந்த பசு மாட்டிற்கு கீரைக்கட்டு, புல் மற்றும் தீவனங்களை அளித்து அதன் காலில் விழுந்து வழிபட்டால் கஷ்டங்கள் குறையும் எனவும் நம்புகிறார்கள். இந்த அதிசய பசுவைக் காண பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் பெருமாளின் வீட்டுக்கு வந்து செல்கின்றனர்.