கனடா செல்லும் ஆசையில் நடுக்கடலில் தவித்த இலங்கையர்கள் : அடையாளம் காணும் பணிகள் ஆரம்பம்!!

1649

நடுக்கடலில் தவித்த இலங்கையர்கள்..

அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதன்போது கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் மலேசியாவிற்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காக பயணித்துள்ளனர். மேலும் படகில் ஏறுவதற்கு முன் ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், விபத்துக்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து 1800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வுங் தாவோ துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாமில் உள்ள தற்காலிக முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்ட அகதிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர்கள் இவ்வாறு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத சூழ்நிலையிலேயே, தாம் கனடா நோக்கி அகதிகளாக செல்ல முயற்சித்ததாக மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும், மீட்கப்பட்ட இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.