சூரியவெவ படகு விபத்து : 10 வயதான சிறுமியின் சடலம் கண்டுபிடிப்பு : இருவரை காணவில்லை!!

671

படகு விபத்து..

சூரியவெவ, மஹாவெலி கடார வாவியில் நேற்று காலை 08 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதன்போது, மூவர் காணாமற்போயிருந்த நிலையில், அவர்களில் 10 வயதான சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 17 மற்றும் 18 வயதான மேலும் இரண்டு சிறுமிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மழை, நீரின் அளவு அதிகரிப்பு காரணமாக தேடும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சூரியவெவ பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் படகை செலுத்தியுள்ள நிலையில் படகில் 08 மாத குழந்தை உட்பட 08 பேர் பயணித்துள்ளனர்.

இதன்போது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஐவர் மீட்கப்பட்டுள்ளதோடு மூவர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த நிலையிலேயே 10 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சூரியவெவ பொலிஸின் உயிர்காப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல்போன சிறுமிகளை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், நீர்வீழ்ச்சிகள், நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற நிலை நிலைகளுக்கு குளிக்கச் செல்லும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.