விடாமல் துரத்திய ஆண் பிள்ளை மோகம்.. பெண் சிசுவை கொல்ல துடித்த கணவன்.. இறுதியில் கர்ப்பிணி பலியான சோகம்!!

443

ஆந்திராவில்..

ஆந்திராவில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 6 மாத பெண் சிசுவை கலைக்க முயன்ற போது சிசுவுடன் சேர்ந்து அந்தப் பெண்ணும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்களை அணுகாமல் வீட்டில் வைத்தே நாட்டு வைத்தியம் செய்ததில் அந்த கர்ப்பிணிப் பெண் துடிதுடித்து இறந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தை நிகழ்த்திய அவரது கணவரையும், மாமியாரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழிப்புணர்வும், படிப்பறிவும் இல்லாத காலத்தில் நடைபெற்று வந்த பெண் சிசுக் கொலைகள், நாகரீக வளர்ச்சியில் உச்சம் தொட்ட இந்த காலத்திலும் ஆங்காங்கே நடைபெற்று வருவது இன்னும் நம் சமூகம் மிகவும் பின்தங்கி இருப்பதைதான் காட்டுகிறது.

அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கோலோச்சி, புதுப்புது சாதனைகளை படைத்து வரும் போதிலும், பெண் குழந்தைகளை பாரமாக நினைக்கும் அறிவு மக்கிப்போன மக்களை என்னவென்று சொல்வது? இதுபோல், பெண் சிசுவை அழிக்க நினைத்து வீட்டிலேயே வைத்தியம் பார்த்ததில் கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் நடந்திருக்கிறது.

இந்த பரிதாபம் சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம். பெண் குழந்தை மீது வெறுப்பு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டையை சேர்ந்தவர் வேணு (35). இவருக்கும் சிவரஞ்சினி (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை மீது அதிக மோகம் கொண்ட வேணுவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெண் குழந்தை பிறந்தது பிடிக்கவில்லை. அதனால் தனது குழந்தை மீதே வெறுப்பு காட்டி வந்துள்ளார் வேணு. மேலும், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்துள்ளார்.

இந்த சூழலில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கர்ப்பம் தரித்தார் சிவரஞ்சினி. இந்த முறை தனக்கு கட்டாயம் ஆண் குழந்தை தான் பிறக்கும் என தீர்க்கமாக நம்பினார் வேணு.

மேலும், வயிற்றில் இருக்கும் குழந்தையை ஆண் பெயர் வைத்து வேணுவும், அவரது குடும்பத்தினரும் கூப்பிடத் தொடங்கினர் இதனிடையே, ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு செல்லும் போதும் வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என மருத்துவர்களிடம் வேணு கேட்டு வந்தார்.

ஆனால், குழந்தையின் பாலினத்தை சொல்வது சட்டப்படி குற்றம்.. இதை நாங்கள் சொல்ல மாட்டோம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  ஆனால், வேணு தொடர்ந்து மருத்துவர்களிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டே இருந்தார். சரி., பாசத்தில்தான் கேட்கிறார் என நினைத்துக் கொண்டு கடந்த வாரம் அவர்களிடம் வயிற்றில் இருப்பது பெண் சிசு என மருத்துவர்கள் கூறினர்.

அவ்வளவுதான்.. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற வேணு, வீட்டுக்கு வந்ததும் சிசுவை அழித்தே தீர வேண்டும் என கத்தி கூச்சலிட்டார். இதற்கு வேணுவின் தாயாரும் ஆதரவாக பேசினார். சிவரஞ்சனி எவ்வளவு எடுத்து சொல்லியும், அதை கேட்பதற்கு வேணு குடும்பத்தினர் தயாராக இல்லை.

அதன்படி, நேற்று முன்தினம் சிசுவை வீட்டிலே வைத்தே கலைப்பதற்காக சில மூலிகைகளை அரைத்து சிவரஞ்சனிக்கு வேணுவும், அவரது தாயாரும் குடிக்க கொடுத்துள்ளனர். ஆனால், சிவரஞ்சனி குடிக்க மறுத்துள்ளார். இதையடுத்து, அவரது வாயில் வலுக்கட்டாயமாக அந்த மூலிகை சாற்றை அவர்கள் ஊற்றினர்.

இதில் சிறிது நேரத்திலேயே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு சிவரஞ்சனி கதறி துடித்துள்ளார். ஆனால், அதுபற்றி சிறிதும் கவலைப்படாமல் அவர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில், உடலில் விஷம் ஏறி சிவரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சிவரஞ்சனி பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வேணுவையும், அவரது தாயாரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, சிசுவின் பாலினத்தை கூறிய மருத்துவர்களையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.